திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியானது வெகு விமர்சியாக பக்தர்கள் முன்னிலையில் மேலத்தாளம் முழங்க நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா கடந்த 5-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழாவானது 15 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தினமும் தங்க குதிரை வாகனம், தங்கமயில் வாரணம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், தங்க பல்லாக்கு, வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முக்கிய நிகழ்வான வெள்ளி யானை வாகனத்தில் கடந்த 11 -ஆம் தேதி கைப்பாரம் தூக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து., 10 ஆம் நாளான நேற்று சூரசம்ஹாரம் லீலையானது மாலை 8:30 மணிக்கு நடைபெற்றது.
தொடர்ந்து 11-வது நாள் நிகழ்ச்சியாக இன்று திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் கொண்டு நடைபெற்றன. மாலையில் பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கோயில் ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார்.
பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தேவானை திருக்கல்யாண வைபோகம் 18ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான 19ஆம் தேதி பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற உள்ளது.