• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்: எடப்பாடி பழனிசாமி

ByP.Kavitha Kumar

Feb 21, 2025

‘உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்’ என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிகளை மாணவர்கள் கற்க வேண்டும் என கூறி வருகிறது. தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தோடு வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இந்த கொள்கையை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு தனி கல்வி நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்புக்கு வழி வகுக்கும் என திமுக, அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.,

இந்நிலையில், உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பகிர்ந்துள்ளார். அதில், “மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை ‘உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்’ என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம். தமிழ் வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.