சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரை பகுதிகளில் சமீபகாலமாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. குறிப்பாக பனையூர் கடற்பகுதி, மெரினா, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து கோவளத்திலும் கடல் ஆமைகள் இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய ஆமைகளை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தமிழக அரசிடம் இதுகுறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, ஆமைகள் இறப்புக்கு காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.