• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு… அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார்

ByP.Kavitha Kumar

Jan 20, 2025

அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14-ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது பிஎன்எஸ்-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.