தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் பல்வேறு தரப்பினர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சீமான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் பேசியதற்கு ஆதாரம் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சீமானின் பேச்சுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “பகுத்தறிவு – சமத்துவம் – பெண் விடுதலை – அறிவியல் வளர்ச்சி – தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” என பதிவிட்டுள்ளார்.