புத்தாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசுமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேரவை தலைவர் அப்பாவு, அழைப்பு விடுத்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி. 6-ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு கொடுக்கும் அறிக்கையை, ஆளுநர் வாசிப்பார் என நம்புவதாகவும் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு இன்று சென்றார்.
அப்போது, தமிழக சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட இருப்பதால், அதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அழைப்பு விடுத்தார். கடந்த டிசம்பர். 9-ம் தேதி இரண்டு நாள்கள் சட்டப்பேரவை கூடிய நிலையில், ஜனவரி 6-ம் தேதி இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.