கல்லூரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக வரும் தகவல் உண்மை இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்தக் கோரி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாணவ பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கல்லூரி தேர்வுகளை ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதனை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி மெரினா கடற்கரையில் சிலர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரவி வருகிறது என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.