• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையம் திறப்பு

Byவிஷா

Nov 26, 2024

சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், சென்னையில் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற விழையும் பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் முதலாவதாக ‘விழுதுகள்’ – ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இங்கு முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் – பேச்சு பயிற்சி, இயன்முறை, செயல்முறை, உளவியல் ஆகிய 6 மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இதற்காக வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இந்த மையம் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து அணுகல் வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் மாற்றுத் திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கழிவறையை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளின் அவசர உதவிக்காக பஸ்ஸர் வைக்கப்பட்டுள்ளது. தவிர, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் முழுமையாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ‘ஐஓடி’ தொழில்நுட்பம் முதல்முறையாக நாட்டிலேயே இந்த மையத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், தொலைவில் உள்ளவர்களும் அவசர சூழ்நிலைகளை உடனே கண்டறிந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ முடியும். இந்த மையம் ரூ.3.08 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டு கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்ட கால அட்டவணைப்படி சேவைகள் வழங்கப்படும்.
இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அங்கு வந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளையும் இணைந்து சோழிங்கநல்லூர் எழில் நகர் சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டிடத்தை ரூ.69 லட்சத்தில் புதுப்பித்துள்ளன. இந்த கட்டிடத்தை பார்வையிட்ட முதல்வர், குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி ஆசிரியர்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏஎம்வி பிரபாகர்ராஜா, க.கணபதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் சிஜி தாமஸ் வைத்யன், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் எம்.லஷ்மி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கே.விஜயகார்த்திகேயன், பெருங்குடி மண்டலக் குழு தலைவர் ரவிச்சந்திரன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஏகாம்பரம், ஸ்ரீராமசரண் பொதுநல அறக்கட்டளையின் நிறுவன தலைவர் பத்மினி கோபாலன், தலைவர் கே.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.