• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வைகை அணை முன்பு உள்ள தரைப்பாலம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் முன்பாக வலது, இடது கரை பூங்காக்களுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட தரைப்பாலம் பாதுகாப்பு கருதி கலெக்டரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து , மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு ஆகியவற்றிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதாலும், பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 68 அடியை தாண்டியுள்ளது .ஏற்கனவே 66 எட்டியதும் கரையோர கிராம மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகை அணையில் பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் வந்து செல்கின்றனர், அப்போது அணைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள வலது கரை பூங்கா , இடதுகரை பூங்கா ஆகியவற்றிலுள்ள பூக்கள் பசுமையான ரம்மியமான காட்சிகள் பூங்காக்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வது வழக்கம்.

வலது கரையில் பெரியாறு நீர் வழித்தட மாதிரி நில வரைபடம் ,மச்சக்கன்னி பூங்கா, கலங்கரை விளக்கம், வைகை அணை மாதிரி பூங்கா பயில்வான் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களையும் ,அதேபோல் இடது கரையில் சைபர் பூங்கா ,கிழவன் கிழவி பூங்கா,மான் பூங்கா, காந்தி பார்க், கிருஷ்ணன் பார்க்,யானை சறுக்கல் உள்ளிட்ட சிறுவர் பூங்கா ஆகியவற்றையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து விளையாடி செல்கின்றனர். வலது கரை பூங்காவில் சிறுவர் ரயிலில் ஏறியும், படகு சவாரியும் ெய்து விளையாடி செல்கின்றனர் .

இந்நிலையில் வலது ,இடது கரை பூங்காக்களை இணைக்கும் விதமாக அணையின் முன்பு ,தாழ்வாக உள்ள தரைப்பாலம் பல்வேறு காலகட்டங்களில் சிறிய, சிறிய சேதங்கள் ஏற்பட்டு , சரி செய்யப்பட்டு வந்துள்ளது .இந்நிலையில் தற்போது அணையின் பாதுகாப்பு கருதியும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முதலமைச்சர் உத்தரவின்படி நீர்நிலைகள் பராமரிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆட்சித் தலைவர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் ஒரு கட்டமாக வைகை அணையில் ஆய்வு மேற்கொண்டு 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் சூழ்நிலை உள்ளதால் ,பொது மக்களின் நலன் கருதி அணைக்கு முன்பாக உள்ள தரை பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது என்று கூறி, இருபக்கமும் முள் வேலிகளை அமைக்க உத்தரவிட்டு ,தரைப்பாலம் தற்போது மூடப்பட்டுள்ளது .எனவே சுற்றுலா பயணிகள் வலது, இடது கரை பூங்காக்களுக்கு செல்ல வேண்டுமென்றால் |ஆற்றின் சுற்றி மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.