முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆணையின்படி அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்துசெய்யவும் மற்றும் விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை கூட்டு முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் விவாகரத்து பெறுபவர்கள் ஜீவனாம்சம் பெறுவதற்கும் இந்த ஆணை வகை செய்கிறது.
மேலும் அபுதாபியில் முஸ்லிம்அல்லாத குடும்ப விவகாரங்களைக் கையாள புதிய நீதிமன்றம் ஒன்று நிறுவப்படும் என்றும் அந்த நீதிமன்றம் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமை மற்றும் திறன்களுக்காக உலகில் அதிகம் விரும்பப்படும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலையை உயர்த்துவதற்கும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் செய்தி நிறுவனமான டபிள்யூஏஎம் தெரிவித்துள்ளது.