• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்

BySeenu

Mar 14, 2024

கோவை கணபதி செக்கான் தோட்டம் – பாலன் நகர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கணபதி செக்கான்தோட்டம் – பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகற்றி விட்டு பொது மக்கள் சென்று வர சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சுரங்க பணிகள் நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. சுரங்கபாதை பணிகளை விரைந்து முடிக்க கோரி ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையினை
கண்டித்து செக்கான் தோட்டம் – பாலன் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இன்று பொதுமக்களும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் திடீரென அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.ரயில் தண்டவாளத்தில் அடுத்தடுத்து ரயில்கள் வந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமரசபடுத்தி தண்டவாளத்தில் இருந்து அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கி மூன்றாண்டுகளாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பொதுமக்களும் தண்டவாளத்தை கடக்க சிரம படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அதுவரை இந்த பகுதியிலிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்த நடைபெற்று வருகிறது.