• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Aug 19, 2026

மதுரை மாநகராட்சி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து தரிசனம் மேற்கொள்வார்கள்.

திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக மாநகராட்சியின் மூலம் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
இன்றைய தினம் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், திருக்கோயிலை சுற்றியுள்ள வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேற்கு மாசி வீதி மற்றும் கிழக்கு மாசி வீதி ஆகிய பகுதிகளை பார்வையிட்டதுடன், அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுகழிப்பறை, கோவிலை சுற்றியுள்ள நடைபாதை, குடிநீர், கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், பொதுமக்கள் வருகை தரும் பாதைகள் மற்றும் மழைநீர் செல்லும் வடிகால்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கும்பாபிஷேகத்தை காண பொதுமக்கள் அதிகளவில் வருகை தர உள்ளதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு உரிய பணியாளர்களை நியமித்திட வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்ததுடன், அப்பகுதியில் உள்ள கழிப்பறைகளை எப்பொழுதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், நடைபாதைகளில் ஆங்காங்கே உள்ள பழுதுகள் மற்றும் மராமத்து பணிகளை உடனுக்குடன் சரி செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கோயிலை சுற்றியுள்ள தெருவிளக்குகளின் நிலை குறித்து அப்பகுதியில் பார்வையிட்டதுடன், தெருவிளக்குகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சியின் மூலம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் சேர்ந்தவுடன் அவற்றை உடனடியாக மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி அப்பகுதிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, உதவி ஆணையாளர் திரு.குமரன் அவர்கள், உதவி நகர்நல அலுவலர் திரு.அபிஷேக் அவர்கள், உதவி செயற்பொறியாளர் திரு.முத்து அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.