சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம், சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அதிமுக பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே.பழனிசாமி சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தலைப்பாகை அணிந்து நெற்றியில் நாமமிட்டு தரிசனம் செய்தார். முன்னதாக, சாமி தோப்பிற்கு வந்த அவரை கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து, தலைமை பதியின் வடக்கு வாசலில் அமைந்துள்ள வைகுண்டர் தவம் இருந்து பகுதிக்கு சென்று இவரின் வரலாற்றை கேட்டறிந்தார்.அதன்பின் கிழக்கு வாசல் வழியாக சென்று மூலஸ்தானத்தில் தரிசனம் மேற்கொண்ட பின் தலைமை பதிக்கு பசுவும் கன்றும் தானமாக வழங்கினார். இதன் பின்னர் அவர் கூறியதாவது; “இறைவனின் மறு அவதாரமாக இருக்கும் அய்யா வைகுண்டரின் ஆசியால் தமிழகத்தில் நல்ல எதிர்காலம் உருவாகும். இங்குள்ள மக்கள் அனைவரும் நேசிக்கின்ற அய்யா வைகுண்டரின் ஆலயத்தில் வந்து தரிசனம் செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பினை உருவாக்கி தந்த ஆலய குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார். இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, கடம்பூர்ராஜு மற்றும் குமரி மாவட்ட நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.