கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத் திட்டம் குறித்து, விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், அந்த மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் அவர்களது கோரிக்கைகளையும், சந்தேகங்களையும் முன் வைத்தனர்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சி தலைமை உரை ஆற்றிய அமைச்சர் மூர்த்தி, 1999 ஆம் ஆண்டு இந்த சமாதான திட்டத்தை கலைஞர் கொண்டு வந்ததாகவும் 5 முறை இது செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றது எனவும், இந்த திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 50,000 வரை வரி நிலுவையில் இருக்கும் 95,000 பேருக்கு தள்ளுபடி செய்து 1002 சொத்துகள் ஒப்படைக்க பட்டுள்ளது என்றார். அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி இருப்பதை சரி செய்ய வேண்டும் என வணிகர்கள் கேட்டு இருக்கின்றனர் என கூறிய அமைச்சர்
மத்திய அரசு , அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்ன தெரியும் இருந்தாலும் அரிசிக்கான கோரிக்கையினை ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் வைப்போம் என கூறினார். மேலும், இது போன்று வணிகவரித்துறையில் தள்ளுபடி செய்திருப்பது வரலாற்றில் இது வரை கிடையாது என்றார். 90 சதவீத வணிகர்கள் நியாயமாக இருந்தாலும் 10 சதவீதம் பேர் போலியாக இருந்து வணிகர்களின் பெயரை கெடுக்க இருக்கின்றனர் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் அதை திரும்ப பெற்று சமாதான திட்டத்திற்கு வந்துவிடலாம் என்றார். மாவட்ட வாரியாக வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களை அழைத்து சமாதான திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூறி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். நிலுவை வரியை கட்டினால்தான் இன்னும் இரு ஆண்டுகள் வரை இந்த சலுகையை நீடிக்க முதல்வரிடம் கேட்க முடியும் எனவும் கூறினார். சமாதான திட்டம் குறித்து பேசும் போது , முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதை கொண்டு வாருங்கள், தமிழக மக்களே உங்களை பாராட்டுவார்கள் என சொன்னார் எனவும் தெரிவித்தார். சிறிய தவறுகள் இருந்தால் அபராதம் விதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
சமாதான திட்டத்தில் மிகப்பெரிய சலுகைகளை அரசு கொடுத்து இருக்கின்றது என்றார். அனைத்து மண்டலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் எனவும் வணிகர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கம் இருக்கின்றது, பேக் பண்ணிய அரிசிக்கு ஒரு வித வரி, பேக் பண்ணாத அரிசிக்கு ஒரு வரி என ஜிஎஸ்டியில் பாகுபாடு இருப்பதாக வணிகர்கள் சிலர் சொன்னார்கள். அதை ஜி.எஸ்.டி கவுன்சிலில் வைப்பதாக சொல்லி இருக்கின்றோம் எனவும், கோதுமை, அரிசிக்கு பாகுபாடு காட்டுவதாக சொல்லவில்லை என கூறினார்.
