• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி கெர்டி கோரி நினைவு தினம் இன்று (அக்டோபர் 26, 1957)…

ByKalamegam Viswanathan

Oct 27, 2023

கெர்டி கோரி (Gerty Theresa Gori) ஆகஸ்ட் 15, 1896ல் பிராகா நகரில் பிறந்தார். 1914ல் ஜெர்மன் சார்லஸ் பெர்னான்ட் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அங்கு கார்ல் பெர்டினான்ட் கோரி என்பவருடன் இணைந்து 1920ல் பட்டப்படிப்பை முடித்தார். பின், அவரையே திருமணம் செய்து கொண்டார். ஆரம்ப காலத்தில் குழந்தை மருத்துவராகப் பணியாற்றினார். முதலாம் உலகப் போரின் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு இருவரும் அமெரிக்காவில் குடியேறினார். மருத்துவத்துறையில் சாதிக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டனார். ஆய்வுகளைத் தொடங்கிய போது அவரது கணவருக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. ஆயினும் கணவருக்குத் துணையாகக் தானும் அங்கேயே ஆய்வுப் பணியில் ஈடுப்பட்டார்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் நோய்வாய்ப்பட்டவரின் வெப்ப மாறுபாடுகளில் சோதனைகளை மேற்கொண்டு, இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி கெர்டி வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை பெரிதாகப் பேசப்பட்டது. இதன் காரணமாக நியூயார்க்கிலுள்ள ராஸ்வெல் பார்க் புற்றுநோய் நிறுவனத்தில் இருவருக்கும் பணி செய்யும் வாய்ப்பும், 1928ல் அமெரிக்கக் குடியுரிமையும் கிடைத்தது. தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுப் புகழ்பெற்றனர். பதினொரு கட்டுரைகளை கெர்ட்டி தனித்து வெளியிட்டார். 1929ல் அவர்கள் வெளியிட்ட கோரி சுழற்சி (இலாக்டிக் அமிலச் சுழற்சி எனவும் அறியப்படுகிறது) குறித்தக் கட்டுரை புகழ்பெற்றது. மனித உடலில் வேதி மாற்றங்கள் நடைபெற்று சர்க்கரை மூலக் கூறுகள் எவ்வாறு கிளைக்கோசன் மற்றும் தசை திசுக்களில் இலாக்டிக் அமிலமாக மாறுகிறது என்ற சிக்கலான வேதிவினையை விவரிக்கும் ‘கோரி சுழற்சி’க்காக, 1947 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை கோரி தம்பதியினர் இணைந்து பெற்றனர்.

பாலின பாகுபாடும் தெரிந்தவர்களுக்கானச் சலுகைகளும் நிறைந்திருந்தாலும், தமது வாழ்நாள் விருப்பமான மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவதை இவர் நிறுத்தவேயில்லை. அறிவார்ந்த, சொல்நயமிக்க கோரி மிகச்சிறந்த சோதனையாளரும் சீர்மை விரும்பியும் ஆவார். ராஸ்வெல் நிறுவனத்தைவிட்டு அவர்கள் வெளியேறியதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் கார்லுக்கு வேலை தர தயாராயிருந்தனர். ஆனால் கெர்ட்டியை அவர்கள் மறுத்தனர். ஒருமுறை பல்கலைக்கழக நேர்முகம் ஒன்றில் ‘திருமணமான தம்பதி’ இணைந்து வேலை செய்வது மிகவும் வேதனையான செயல் என்று கெர்ட்டி இதைக் குறிப்பிட்டார். 1931ல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் ஆய்வாளராகப் பணியாற்ற கார்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. கணவருக்கு இணையான அனுபவம் இருந்தும் கெர்ட்டி பத்தில் ஒரு பங்கு ஊதியத்தில் ஆய்வுப்பணி உதவியாளராகத்தான் சேர்த்து கொள்ளப்பட்டார். தன் தொடர் முயற்சியால் 1943ல் உயிர்வேதியல் ஆய்வுக் கூடத்தின் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின், 1946ல் பேராசிரியராகப் பொறுப்பை ஏற்றார்.

1947ம் ஆண்டு உடற் செயலியலின் போது நிகழும் கிளைக்கோஜன் மாற்றத்தைக் கண்டுபிடித்ததற்காக இவரும் இவரது கணவரும் நோபல் பரிசு பெற்றனர். இந்த நோபல் பரிசை, இவர்கள் பிட்யூட்டரி சுரப்பி சர்க்கரை மூலக்கூறில் ஏற்படுத்தும் உடற்செயலியல் விளைவைக் கண்டுபிடித்ததற்காக அர்ஜெண்டினா அறிஞர் பெர்னார்டோ ஊசேயுடன் இணைந்து பெற்றனர். மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி. பெண் என்ற பாகுபாட்டைத் தவிர்த்து தனது அயராத உழைப்பால் மருத்துவத் துறையில் தொடர்ந்து பாடுபட்ட கெர்ட்டி தெரோசா கோரி அக்டோபர் 26, 1957ல் தனது 61வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். கெர்ட்டியின் நினைவாக நிலவின் ஒரு பள்ளத்திற்கு கோரி எனப் பெயரிடப்பட்டது. அதேபோல வெள்ளியிலும் கோரி கிண்ணக்குழி இவரது பெயரிடப்படுள்ளது. செயின்ட் லூயி சாதனையாளர் நினைவகத்தில் தனது கணவர் கார்லுடன் ஓர் விண்மீனை பகிர்ந்துகொண்டுள்ளார்.