சென்னையில் உள்ள அருள்மிகு கந்தசாமி ஆதிமொட்டையம்மன் திருக்கோவில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டு, துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சில அமைப்புகள் தி.மு.க. இந்துகளுக்கு, ஆன்மிகத்திற்கு எதிரான இயக்கம் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதை தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்றபிறகு தகர்த்து எறிந்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை மூலம் 410 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ.1,789 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. கோவில் நில ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.
பக்தர்களின் நேர்த்திக்கடனை தீர்ப்பதற்கு திருக்கோவிலுக்கு சொந்தமான 65 தங்கத்தேர்கள், 45 வெள்ளித்தேர்கள் இன்று முதல் கோவில் உள்ளே வீதி உலா வர அனுமதி வழக்கப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவிலில் பாதுக்காக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
2011-ம் ஆண்டு பிறகு உள்ள நகைகளை உருக்கி வருவாயை பெருக்குவதை தேவையில்லாமல் பூதாகரம் ஆக்க நினைப்பவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள். பூத கண்ணாடி வைத்து எந்த தவறும் நடைபெறாத வகையில் நீதிபதிகள் தலைமையில் பணிகள் செய்து வருகின்றோம் என அவர் கூறினார்.