

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த 10-அடி நீளமுள்ள இரு மலை பாம்புகளை பிடித்த இளைஞர்கள் அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெட்டி கோணம் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையே சில தினங்களாக மலைப்பாம்பு ஒன்று வலம் வந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பை தேடி வந்த நிலையில், இன்று குடியிருப்பு பகுதியில் உள்ள புதருக்கிடையே பதுங்கி இருந்த 10-அடி நீளம் கொண்ட மலை பாம்பை பிடித்தனர்.

இதேபோன்று திங்கள் நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10-அடி நீளம் கொண்ட மற்றொரு மலைப்பாம்பும் அப்பகுதி இளைஞர்களிடம் பிடிப்பாட்ட நிலையில், இரு மலைப்பாம்புகளும் தக்கலை புலியூர்குறிச்சி பல்லுயிர் பூங்காவில் இளைஞர்கள் ஒப்படைத்தனர். அங்கிருந்து இரு பாம்புகளையும் கைப்பற்றிய வனத்துறையினர் அவற்றை பெருஞ்சாணி அணை அருகே உள்ள வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில் மழை காலங்களில் அணைகள் திறக்கும் போது காட்டாற்று வெள்ளத்தில் மலை பாம்புகள் சிக்கி அடித்து வரப்படுவதாகவும், அவை குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுவதாகவும், கடந்த ஆறு மாதத்திற்குள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள் சிக்கியதாகவும் அவற்றை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
