• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆடி மாதம் நிறைவு நாளான இன்று பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை…..

ByKalamegam Viswanathan

Aug 17, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும், இன்று ஆடி மாதம் நிறைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளன. சிவகாசி தாலுகா, சாத்தூர் தாலுகா, விருதுநகர் தாலுகா, வெம்பக்கோட்டை தாலுகா பகுதிகளில் அதிகளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளிலும், ஆடி மாதம் முடிவு பெறும் நாளிலும் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடும் பழக்கம் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆடி மாதங்களில் கிராமத்தில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால், ஆடி மாதம் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பாக, சிவகாசி அருகேயுள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஆடி மாதம் பெரிய விபத்து நடந்து ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழந்ததால், ஆடி மாதம் முதல் மற்றும் 2ம் நாட்களிலும், ஆடி மாத கடைசி நாளிலும் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மூத்த பட்டாசு தொழிலாளர்கள் கூறுகின்றனர். இன்று ஆடி மாத கடைசி நாளை முன்னிட்டு சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் விடப்படும் விடுமுறை நாட்களில், பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறினர். நாளை முதல், வரும் தீபாவளி நாள் வரை வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெறும் என்று தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.