• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்

ByA.Tamilselvan

May 7, 2023

நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு நாளை (திங்கட்கிழமை) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றன.
கடந்த 5-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.