கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் முதன்முறையாக மனிதரின் தோல் தானமாகப் பெறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 31). அப்பகுதியில் உள்ள துணி கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நாகராஜின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மருத்துவமனையில், நாகராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க விரும்புவதாக அவரது தாயார் தெரிவித்தார். மேலும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை தோல் தானமாக பெறப்பட்டது கிடையாது. இந்நிலையில், நாகராஜின் தோல் தானமாக பெற முடிவு செய்யப்பட்டது. அதற்கும் அவரது தாயார் சம்மதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு நாகராஜின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது. அதே போன்று அவரது தோலும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. உடல் உறுப்புகள் அரசில் பதிவு செய்தவர்களுக்கு அவர்களது முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. மேலும் தீக்காயம், விபத்து உள்ளிட்ட பாதிப்புகளால் தோல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்களுக்கு தோல் தானமாக வழங்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.