• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை

ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அடுத்த மாதம் திறக்கப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்து உள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ந்தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஐ.நா. செல்கிறார். அப்போது இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மாவின் இந்த சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்து உள்ளார். இதன் மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது. முன்னதாக கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐ.நா.வுக்கு பரிசளித்து இருந்தது. இந்த தகவல்களை ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.