நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்டதற்காக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றை சிதைக்கும் வகையிலான செய்திகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளபக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் போலி செய்திகளை வெளியிடுவதாக எழுந்த புகாரின் பேரில், கண்காணிப்பில் ஈடுபட்ட மத்திய அமைச்சகம் தற்போது 8 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 7 சேனல்கள், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனல் என மொத்தம் 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேறு சேனல்களில் தடை செய்யப்பட்ட மத ரீதியிலான வீடியோக்கள், தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. முடக்கப்பட்ட சேனல்களில் உள்ள தேசவிரோத செய்திகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.