உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி வரும் 7ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக விவசாய சங்கங்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து உசிலம்பட்டியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்., இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் உண்ணாவிர போராட்டம் நடத்தியும் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்காத அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து அடுத்தகட்ட போராட்டமாக வரும் 7ஆம் தேதி உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக இன்று உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைத்து கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவிப்பது எனவும் வணிகர் சங்கம் ஆதரவு அளித்துள்ள சூழலில் வர்த்தக சங்கத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 5ஆம் தேதியே அனைத்து வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வழங்கி, 7ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.