மதுரையில் திருட்டு போன பொருட்களை மீட்டெடுக்க கிராம மக்களின் பார்முலா கைகொடுத்திருப்பது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கள்ளிக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வாசர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று பீரோவில் இருந்த 15 பவுன் தங்கநகைகள், மற்றும் 4.50 லட்சம் திருடு போனது. இதுகுறித்து இவர் சமயநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், கிராமமக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில், இரவு விநாயகர் கோவில் முன்பு டிரம் வைத்து, இரவு மின்சாரத்தை துண்டித்தவுடன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்தவர்கள் அந்த டிரம்மில் போட்டு விட வேண்டும் என முடிவு செய்தனர்.
அதன்படி, கோவில் முன்பு டிரம் வைக்கப்பட்டு, வீடுகள்தோறும் பேப்பர் மற்றும் கவரைக் கொடுத்தனர். இதையடுத்து, இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காலையில் எழுந்து பார்த்த போது, திருடு போன கண்ணன் என்பவர் வீட்டு வாசல் முன்பாக 15 பவுன் நகைகள், ரூ.3.15 லட்சம் கவரில் கிடந்தது.
இதேபோன்று, கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று, மதுரை திருமங்கலம் பெரிய பொக்கம்பட்டியில் வீட்டில் திருடு போன சம்பவத்திலும், கிராமத்தில் அண்டா வைத்து நகை மீட்கப்பட்டது. அதே பார்முலாவை சமயநல்லூர் பகுதியிலும் பின்பற்றி நகையை மீட்டுள்ளனர்.