• Fri. Apr 26th, 2024

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் விநியோகம்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் நகைகளுக்கு மிகாமல், அடகு வைத்துள்ள விவசாயிகளுக்கு நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட, தோளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 5 பவுனுக்கு மிகாமல் நகை அடகு வைத்திருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக அலுவலர் பிராங்க்ளின் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றிருந்தவர்களில் 32 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அச்சமங்கலம் கிராமத்தில் நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தலைமை வகித்து, பாலிநாயனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்ரூ.6.10 லட்சம் மதிப்பில் நகைக்கடன் பெற்ற 30 பயனாளிகளுக்கு, தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர், நிறைவேற்றி வருகிறார். அதன்படி தற்போது பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *