2024-2025ஆம் கல்வியாண்டில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், 3 நாட்களில் 45, 430 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கேட்டு, 3 நாட்களில் 45 ஆயிரத்து 430 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு மே 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள், தங்களது EMIS – ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும் எனவும், அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
3 நாளில் 45,430 ஆசிரியர்கள் பணிமாறுதல் விண்ணப்பம்
