• Sun. Mar 16th, 2025

இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 27 மீனவர்கள்

ByPrabhu Sekar

Feb 27, 2025

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்திலிருந்து 13 மீனவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி மாலையில் கடலுக்கு, விசைப்படையில் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் இலங்கை கடலோர காவல் படை ரோந்து கப்பல் வந்து, தங்கச்சிமடம் மீனவர்களின் விசைப்படகை மடக்கிப் பிடித்தனர். அதோடு எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, 13 மீனவர்களையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, இலங்கை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து, 14 மீனவர்கள், இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, விசைப்படகு ஒன்றில் கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் வந்த இலங்கை கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை மடக்கிப்பிடித்து, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, 14 மீனவர்களையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அடுத்தடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள், இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள், தமிழக மீனவர்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படைக்கு எதிராக, ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் போராட்டங்களை நடத்த தொடங்கினர்.

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் மீனவர்கள் 27 பேரும், விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உடனடியாக தூதரக அதிகாரிகள், மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 27 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்களை, இந்திய தூதரக அதிகாரிகள் வழங்கினர். அதோடு மீனவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் தூதர அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

இதை அடுத்து நேற்று இரவு, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 27 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், மீனவர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.