பெங்களூர் வனவிலங்கு ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 228 வகை பறவை இனங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழக – கேரள எல்லையில் 925 கிலோமீட்டர் பரப்பளவில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், ரத்தினம் திட்டம் மாவட்டங்களில் பெரியார் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. சர்வதேச புகழ்பெற்ற தேக்கடி சுற்றுலா தலமும், முல்லைப் பெரியாறு அணையும், கண்ணகி கோவிலும் இந்த சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2013இல் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் 221 வகை பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில் இந்த ஆண்டு கணக்கெடுப்பில், வனச் சரணாலத்தில் பறவை இனங்கள் கூடிய உள்ளனவா? புதிதாக ஏதும் பறவை இனங்கள் வந்துள்ளனவா? காலநிலை, சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் பறவைகளின் இயற்கைவாழ் சூழலில் மனிதர்கள் சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறி நுழைவதாலும் அது பறவை இனங்களை பாதிக்கிறதா? இடம்பெயர்கிறதா என்ற கோணத்தில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது.


இந்தக் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கேரளா வேளாண் பல்கலைக்கழகம், வனவிலங்கு ஆய்வு மையம் – பெங்களூரு, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், மலபார் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்- திருவனந்தபுரம், கோட்டயம் நேச்சர் சொசைட்டி, மலபார் விழிப்புணர்வு மற்றும் மீட்பு மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள், வனத்துறை ஊழியர்கள், பறவை நிபுணர்கள் உட்பட 54 பேர் பங்கேற்றனர்.

புலிகள் காப்பகத்தில் பறவைகள் அதிகம் வந்து போகும் இடங்கள் பறவைகள் தங்கி ஓய்வெடுக்கும் இடங்களான வண்டிப்பெரியாறு, தேக்கடி, வெள்ளக்கடவு, அழுதா மற்றும் பம்பை வனச்சரங்களுக்கு உட்பட்ட 28 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரியார் புலிகள் சரணாலயத்தில் 228 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன.


இதுகுறித்து பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகள் கூறுகையில்..,
பெரியார் புலிகள் சரணாலயத்தில் கடந்த முறை கணக்கெடுப்பில் இல்லாத புளூத்ரோட், ட்வேனி பிபிட், அல்ட்ராமரைன், ஃப்ளைகேட்சர் மற்றும் சிவப்பு மார்பக ஈ பிடிப்பான் ஆகிய 4 இனங்கள் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட பறவைகளில் 16 பறவைகள் அழியும் அபாயத்தில் உள்ளன என்றனர்.








