முன் எப்போதும் இல்லாத அளவில் நீட் நுழைவுத்தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
2023-2024 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20.8 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும் 9 லட்சத்து 02 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
மாநில வாரியாக அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.