இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் அருகே கீழகாசாக்குடிமேடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கீழகாசாக்கடிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்பட 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 6-ந் தேதி இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது தட்பவெட்ப நிலை காரணமாக படகு முல்லை தீவு பகுதியில் ஒதுங்கியது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் படகுடன் கைது செய்தனர். இவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கோர்ட்டு உத்தரவுபடி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி புதுவை மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையின் பேரில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.