

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளில் 11 பேர், இந்திய ராணுவத்தின் நிரந்தர ஆணையத்தில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இதனை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. நிரந்தர ஆணையத்தில் அவர்களை சேர்த்திட நவம்பர் 26ம் தேதி வரை கெடு விடுத்திருந்தது. அதனால், அந்த 11 பெண் அதிகாரிகளையும் நிரந்தர கமிஷனில் சேர்த்திட இந்திய இராணுவம் இன்று ஒப்புக் கொண்டுள்ளது.
நிரந்தர ஆணையத்தில் சேர்க்கப்படுவதன் மூலம், பெண் அதிகாரிகள் ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு செல்லலாம். அதன்படி அவர்கள் சிறப்பு பயிற்சிகள் மற்றும் சவாலான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வர்.
2020ம் ஆண்டு டிசம்பர் முதல், ஜூனியர் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கமிஷனில் சேருவதற்கு குறைந்தது 10 வருடங்களாவது பணியாற்றி இருக்க வேண்டும்.
முன்னதாக, இந்திய ராணுவத்தில் உள்ள 10 பிரிவுகளின் கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்காகவும் நிரந்தர ஆணையம் அமைத்திட ஆணையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
