அண்மை காலமாக நம்மை அச்சுறுத்தி வருகிற கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வலியுறுத்தியது. இதையொட்டி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ரவிச்சந்திரன் அவர்கள் ஆலோசனைப்படியும், உதவி முதல்வர் மரு. சாந்தாராம் அவர்கள் வழிகாட்டுதலின் படியும், பொது மருத்துவத்துறை துறைத்தலைவரும்,கொரோனா தடுப்பு நோடல் அலுவலருமான மரு. அழகேசன் அவர்கள் அறிவுறுத்தலின் படியும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நலக்கல்வி நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சி மருத்துவமனை உள்வளாகத்திலும், உயர் சிறப்பு மருத்துவமனையின் உள் வளாகத்திலும் செவிலியர் பயிற்றுநர் செல்வன் அவர்கள் தலைமையில் செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் பாராமெடிக்கல் பயிற்சி மாணவர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு விழிப்புணர்வு நலக்கல்வியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு உறைவிட மருத்துவர் ஷியாம், உதவி உறைவிட மருத்துவர் சியாமளா அவர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், பொது மக்களிடையே சமூக விலகல், முகக்கவசம் அவசியம், தடுப்பூசி பயன்பாடுகள் குறித்தும், மற்றும் கைகளை சுத்தம் செய்வதின் ஏழு நிலைகள் உள்ளிட்ட விழிப்புணர்வு நலக்கல்வியை பொதுமக்களிடத்தில் வழங்கினர். மேலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கைப்பிரதிகள் வழங்கப்பட்டது. நிறைவாக, உறுதிமொழி எடுக்கப்பட்டது.