சிவகங்கையில் திருமண மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு ரூ 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு தளர்வுகளுடன், பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கை தொண்டி ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் உரிய அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புகார் வந்தது.
இதனையடுத்து ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கோட்டாட்சியர் முத்துக்கழுவனிடம் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். சம்பவ இடம் சென்ற கோட்டாட்சியர் உரிய அனுமதியின்றி தனியார் திருமண மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தை நிறுத்த உடனடியாக உத்தரவிட்டதுடன், அனுமதியின்றி கூட்டம் நடத்திய கம்பெனிக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தனர். மேலும் திருமண மண்டப உரிமையாளருக்கு அரசின் நடவடிக்கை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.