• Fri. Apr 26th, 2024

ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கை… மறுப்பு கொடுத்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!..

Byadmin

Jul 20, 2021

வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக அறிக்கை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொச்சியிலிருந்து பெங்களூரு வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டு பகுதியான ஓசூர் அருகே கெலமங்கலத்தில் விளைநிலங்களில் குழி தோண்டப்பட்டு, எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதைத் தமிழ்நாடு முதல்வர் தடுத்து, விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரம் இந்த எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும்,அதனை தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் சமீபத்தில் அறிக்கை விட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் பெட்ரோலியம், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்கள் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், கெயில் போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களால் கடந்த ஆட்சியில், 2018ஆம் ஆண்டு முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2018 ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 1,000 கி.மீ நீளத்துக்கு பெருவாரியாக விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலியம், எரிவாயு குழாய்கள் தமிழ்நாட்டில் பதிக்கப்பட்டுள்ளன.

எண்ணூர் – மணலி இடையே குழாய் பதிக்கும் பணி முடிந்து இத்திட்டம் கடந்த 2019 மார்ச் 6ஆம் தேதியும், ராமநாதபுரம் – தூத்துக்குடி குழாய் பதிக்கும் திட்டம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியும் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது அப்போதைய துணை முதல்வர் பங்கேற்றார். உண்மை இவ்வாறு இருக்க, குழாய் பதிக்கும் திட்டங்கள் கடந்த ஆட்சியில் நடக்காதது போன்றும், இந்த திட்டங்கள் தற்போதுதான் புதிதாகச் செயல்படுவது போன்றும் மாயையை உருவாக்க, குழாய் பதிப்புப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஓர் அறிக்கையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டிருப்பது வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

நில உரிமையாளர்கள் ஆதரவுடனும், கூடுதல் இழப்பீடு வழங்கியும் இத்திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாத்தியக்கூறு உள்ள இடங்களில் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு வலியுறுத்துகிறது.

இந்த நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தங்கள் ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை மறந்துவிட்டு, இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கைகளை இனிமேலும் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *