கட்சியின் தலைமை முடிவெடுத்தால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்குத் தயாராகி வருகின்றன. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் தனது சாதனைகளை முன்வைத்து பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்.
முதல்வர் யோகி செய்தியாளர்களைச் சந்தித்து, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “கட்சித் தலைமை முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கள் கட்சி தலைமை என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அந்த இடத்திலிருந்து நான் போட்டியிடுவேன்.
தொடர்ந்து பேசிய யோகி, “கடந்த தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் சமூகத்தின் கடைசி மனிதனையும் சென்றடைந்துள்ளது. இதேபோல் சட்டம் – ஒழுங்கில் பிற மாநிலங்களுக்கு உத்தரப் பிரதேசம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக எந்தக் கலவரமும் ஏற்படவில்லை.
நல்ல சாலை இணைப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் நாட்டிலேயே சிறந்த இடமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது. எனது ஆட்சிக் காலகட்டத்தில் சுமார் 4.5 லட்சம் பேர் வெளிப்படையான முறையில் வேலை பெற்றுள்ளனர்” என்று பேசினார்.