தலைகீழாக செல்லும் விமானத்துடம் இன்றைய இந்தியாவை ஒப்பிட்டு பேசிய புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய், அது விபத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வளரான ஜி.என். சாய்பாபா எழுதிய ‘என்னுடைய பாதையை பார்த்து ஏன் இந்தளவுக்கு அஞ்சுகிறீர்கள்’ என்ற புத்தகத்தின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.அதில் பேசிய அருந்ததி ராய், “1960களில் வளத்தையும் நிலத்தையும் சமமாக பகிர்ந்தளிப்பதற்காக உண்மையான புரட்சிகர இயக்கங்களை தலைவர்கள் தலைமை தாங்கி நடத்தினர். ஆனால், தற்போது, 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ உப்பையும் விநியோகம் செய்து தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள்” என்றார்.
இதுகுறிக்கு விரிவாக பேசிய அவர், “விமானத்தை தலைகீழாக இயக்க முடியுமா? என என்னுடைய நண்பரான விமானி ஒருவரிடம் சமீபத்தில் கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்துவிட்டார். இதுதான் தற்போது நடைபெற்று கொண்டிருப்பதாக கூறுகிறேன். நாட்டின் தலைவர்கள் விமானத்தை தலைகீழாக இயக்கி கொண்டிருக்கிறார்கள். அனைத்தும் வீழ்ச்சி அடைந்துவருகிறது. விபத்தை நோக்கி நாம் பயணித்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
இந்தியா அதிநவீன சட்ட அமைப்பை கொண்டிருப்பதாகவும் ஆனால், அது சாதி, வரக்கம், பாலினம், இனம் சார்ந்து அமல்படுத்தப்படுவதாகவும் அவர் விமரிசித்துள்ளார்.
மனித உரிமை ஆர்வலர் சாய்பாபா குறித்து பேசிய அவர், “நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்? 90 சதவிகித உடல் பாகங்கள் இயங்காத பேராசிரியர் குறித்து பேசி கொண்டிருக்கிறோம். ஏழு ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை தான் பேசி கொண்டிருக்கிறோம்.இதுவே போதும். மேலும் பேச வேண்டாம். நாம் என்ன மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சொல்ல இதுவே போதுமானது. இதில் என்ன வெட்கம் இருக்கிறது?” என்றார்.மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகவும் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்கும் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, மகாராஷ்டிரா கட்சிரோலியில் உள்ள அமர்வு நீதிமன்றம், சாய்பாபாவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது. 90 சதவிகித உடல் குறைபாடுள்ள சாய்பாபா சக்கர நாற்காலியையே பயன்படுத்திவருகிறார்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் சாய்பாபா மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவருகின்றனர். தில்லி பல்கலைக்கழகத்தின் இயங்கிவரும் ராம் லால் அனந்த் கல்லூரியில் துணை பேராசிரியராக அவர் பணியாற்றிவந்தார. பின்னர், கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.