கோவையில் புளிய மரத்தில் காய் பறிக்க இரும்பு கம்பியுடன் ஏறிய தொழிலாளி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மரத்திலே கருகி கிடந்த உடலை காவல்துறை மீட்டனர்.
புளியமரத்தில் காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
கோவை அருகே கோட்டை பாளையத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சம்பத். இவர் தனது மனைவி பிரேமலதா மகன் அஷ்யந்த் ஆகியோருடன் நேற்று கோவை சக்தி தேசிய நெடுஞ்சாலையில் குரும்பபாளையத்தில் புளிய மரத்தில் புளியங்காய் பறித்து உள்ளார்.
அப்பொழுது 15 அடி நீளமுள்ள இரும்பு கம்பியை பயன்படுத்தி புளிய மரத்தில் ஏறி புளியங்காய் அடிக்கும் போது கைத் தவறி மரத்தை ஒட்டிச் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டுவிட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பத் உடல் கருகியது. மரக் கிளைகளுக்கு இடையே சிக்கி இருந்தார். கோவில்பாளையம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






