சென்னை வேளச்சேரியில், ஒருவழிப்பாதை வழியாக சைக்கிளில் செல்ல முயன்ற பெண் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு வேலை செய்து வந்த சங்கீதா என்ற பெண், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வேளச்சேரி 200 அடி சாலையில் வந்த அவர், ஒருவழிப்பாதையில் செல்ல முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்து வலதுபுறம் திரும்பிய நிலையில், சங்கீதா மீது மோதி ஏறி இறங்கியது.
பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய சங்கீதா சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்ததும் பேருந்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்து கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்கீதா வந்ததை பேருந்து ஓட்டுநர் தாமதமாக கவனித்ததாக கூறப்படும் நிலையில், திடீரென பேருந்தை நிறுத்த முடியாததால் விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.