


தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியதால் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதம் அடைந்தன.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் அதிகாலை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை உத்தமபாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதில் உத்தமபாளையம் சின்னமனூர் செல்லும் சாலையில் பலத்த காற்று வீசியது. அப்பகுதியில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த நயினார் முஹம்மது என்பவர் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வைத்து வாழை விவசாயம் செய்து வருகிறார்.

அதிகாலை வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாழை மரங்களில் குலை வெட்டும் தருவாயில் இருந்ததால் விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி நைனார் முஹம்மது கூறுகையில், சுமார் ஓராண்டு காலமாக வாழைக்கன்றுகளை வைத்து மரங்களை வளர்த்து தற்போது வெட்டும் தருவாயில் மரங்கள் அனைத்தும் உள்ள சூழலில் திடீரென வீசிய காற்றின் காரணமாக வாழை மரங்கள் அனைத்தும் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் இருந்து கடன் பெற்று இந்த வாழை விவசாயிகள் செய்து வருவதாகவும் தனது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு இதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

