• Fri. Apr 19th, 2024

“மீண்டும் வெற்றி… தமிழர்களுக்கு இதுவே ரியல் பொங்கல் பரிசு” – சு.வெங்கடேசன் பெருமிதம்!

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் பட்ட இன்னல் குறித்து நான் 29.12.2021 அன்று வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார்.


அதில், “வங்கி படிவங்கள் மாநில மொழிகளில் உறுதி செய்யப்படுவது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கும், வங்கி சேவைகளை எளிதாக்கவும் நாங்கள் வங்கியின் படிவங்கள் மற்றும் இதர எழுதுபொருட்களை மாநில மொழி உட்பட மும்மொழிகளில் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். அதன்படி மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய வங்கியில் பணம் எடுத்தல், போடுதல் மற்றும் சேமிப்பு, புதிய கணக்கு துவக்கம் வாடிக்கையாளர் சேவை, வரைவோலை/ RTGS / NEFT தொடர்பான படிவங்கள் அனைத்தும் ஏற்கனவே வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக தமிழில் வழங்கப்பட்டுள்ளன.

குறைவாகப் பயன்படுத்தப்படும் சில படிவங்களும் கூட தமிழில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம், விரைவில் அவை கிடைக்கும். சம்பந்தப்பட்ட கிளைக்கு ஏற்கெனவே மாநில மொழியில் லாக்கரை திறப்பதற்காள பதிவேடு வழங்கப்பட்டுவிட்டது. மாநில மொழிகளில் அனைத்துப் படிவங்களையும் கட்டாயம் வழங்க வேண்டுமெனவும், தேவையெனில் மேலும் புரிதலுக்காக உள்ளடக்கங்களை வாடிக்கையாளர்களுக்கு விளக்கவும் எங்களது அனைத்து எஸ்பிஐ கிளைகளையும் அறிவுறுத்தியுள்ளோம்.சிறந்த வாடிக்கையாளர் சேவையை சற்றும் தளர்வின்றி வழங்குவோம் என எஸ்பிஐ சார்பாக உறுதியளிக்கிறோம்.

இதை நாங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். பொங்கல் விழாவினையொட்டி எஸ்பிஐ சார்பில் இவ்வுறுதி அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்துக்கான சிறந்த பொங்கல் பரிசாகும். வங்கியின் பொது மேலாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலையத்திலும் தமிழ் படிவங்களை உறுதி செய்வதில் வெற்றி பெற்றோம். இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் தமிழ் படிவங்களை உறுதி செய்வோம். அதற்கான முதல் வெற்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் மீண்டும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *