எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீதுஇன்று விசாரணை நடைபெறுகிறது. அன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதால், தீர்ப்புக்குப் பின்னரே வேட்பாளரை அறிவிக்க இரு அணியினரும் முடிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை, கட்சி சின்னம் குறித்து உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தங்களுக்குத்தான் அதிமுக சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகின்றன. இதற்காக, இருவரும் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இரு அணியினரும் போட்டியிட முடிவு செய்துள்ளதால், இரட்டை இலை முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீரிக்க வேண்டும். இதனால் உச்ச நீதின்றத்தின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும். மேலும், தற்போதைய நிலையில் நான்தான் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதால், எனக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தது.
அதில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்தால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அல்லது தீர்ப்பு சாதகமாக இல்லாவிட்டால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவது என்று எண்ணத்தில் உள்ளார். உச்ச நீதின்றம் தீர்ப்பு வந்த பிறகே, தனது அணி வேட்பாளரை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பாஜவின் முடிவுக்காக காத்திருக்கிறார். அவரும் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து சிக்கலும், இழுபறியும் நீடிக்கிறது