நீலகிரி மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த 20 நாட்களில் நூற்றுக்கணக்கான காட்டுப்பன்றிகள் மர்ம நோயால் பலியாகி வருகின்றன.
தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்கள் ஒன்றினைந்த தொடர் வனப்பகுதியாக உள்ளது நீலகிரி மாவட்ட . இந்த வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மான்கள், நூற்றுக்கணக்கான காட்டுப்பன்றிகள், கரடி, சிறுத்தைகள், புலி, யானைகள் என ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 20 நாட்களாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, உதகை, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் 300க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் மர்ம நோய்களால் தொடர்ந்து உயிரிழந்து வருகிறது.இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த காட்டு பன்றிகளை உடற்கூறு ஆய்வு செய்து எதனால் உயிரிழந்தது என்பதை கண்டறிய வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் பன்றிகள் உயிரிழந்ததற்கான காரணம் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது.
இச் சம்பவம் வனத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த வரும் காட்டுப்பன்றிகளை தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ குழுவின் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவ குழுவினர் உயிரிழந்த காட்டுப்பன்றிகளை உடற்கூறு செய்து முக்கியமான உறுப்புகளை ஆய்விற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ள காட்டுப்பன்றிகள் உடற்கூறு செய்த பின் எரிவூட்டப்படுகிறது. தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றிகளை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விலை நிலங்களின் அருகே காட்டுப்பன்றிகள் எங்கு எங்கு உயிரிழந்துள்ளது என்பதை கண்டறியும் பணிகள் வனத்துறை சார்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது.