• Thu. May 15th, 2025

வாட்ஸப் மூலம் ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு

Byவிஷா

May 9, 2025

இனி ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு வாட்ஸப் மூலம் தீர்வு காணப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு வசதியான பயணத்தை வழங்க இந்திய ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. சில விதிமுறைகள் பயணிகளுக்கு உதவியாகவும், சில விதிமுறைகள் பயணிகளுக்கு கடுமையாகவும் இருக்கும்.
இந்நிலையில், இந்திய ரயில்வே தற்போது ஒரு பெரிய ஏற்பாட்டை பயணிகளுக்காக செய்துள்ளது. இது ரயில் பயணத்தை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றும் என்று கூறப்படுகிறது. ரயில் பயணிகள் சந்திக்கும் எந்தவொரு சிரமத்திற்கும் விரைவான தீர்வை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இந்திய ரயில்வே விரைவில் ஒரு வாட்ஸ் அப் எண்ணை வெளியிடுகிறது. அதில் பயணிகள் தங்கள் புகார்களைப் பதிவுசெய்து உடனடியாக தீர்வு பெற முடியும்.
ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே விரைவில் ஒரு வாட்ஸ்அப் எண்ணை கொண்டுவருகிறது. இது எந்த சூழ்நிலையிலும் பயணிகளுக்கு உதவும். அடுத்த வாரத் தொடக்கத்துக்குள் இந்திய ரயில்வே இந்த வாட்ஸ்அப் எண்ணை வெளியிடும் என்றும், இதன் மூலம் பயணிகள் தங்கள் புகார்களைப் பதிவுசெய்து உடனடி உதவி கேட்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவி கிடைக்கும் வரை இந்த வாட்ஸ்அப் எண்ணில் சாட் மூலம் ஒவ்வொரு அப்டேட்டையும் பயணிகள் பார்க்க முடியும்.
இந்திய ரயில்வேயின் வாட்ஸ்அப் எண் ரயில் பயணிகளின் புகார்களை உடனடியாக தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். ரயில்வே வழங்கிய வாட்ஸ்அப் எண்ணில் ஏதேனும் உதவி கேட்டால், உங்களுக்கு யுஐ மூலம் செய்தி வரும். அதில் உங்கள் பிரச்சினை தொடர்பான கூடுதல் தகவல்கள் கேட்கப்படும். முழு விஷயத்தையும் பகிர்ந்த பிறகு, சிறிது நேரத்திலேயே ஒரு ரயில்வே அதிகாரி உங்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க உங்களை அழைப்பார்.
பயணிகளின் வசதியை மனதில் கொண்டு, இந்திய ரயில்வே தொடர்ந்து விதிமுறைகளை மாற்றி வருகிறது. சமீபத்தில், மே 1 முதல், இந்திய ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகளின் விதிகளை மாற்றியது. காத்திருப்பு டிக்கெட் வைத்துக் கொண்டு சில பயணிகள் ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் அமர்ந்து பயணம் செய்கிறார்கள். இது டிக்கெட்டுகளை உறுதிப்படுத்திய பயணிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே தான் இந்த விதிமுறையை இந்திய ரயில்வே கடுமையாக்கியது.