பரிகாரம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல. இறைவனுக்கும் உண்டு என்பது தெரியுமா? பரமேஸ்வரன் ஆனாலும் பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பல்வேறு புராணக்கதைகள் உண்டு. அப்படியான ஒன்று முருகப்பெருமானுக்கு உண்டாகிய தோஷம்.
முருகப்பெருமான் தேவர்களை காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும் அவனை சார்ந்தவர்களையும் அழித்தார். சூரசம்ஹாரம் செய்த பிறகு முருகப்பெருமான் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். துஷ்டர்களையே வதம் செய்தாலும் கூட இறைவனுக்கு ஹத்தி தோஷம் பிடிக்க செய்யும். அதன் பிறகு அவருக்கு வீரஹத்தி தோஷம் உண்டானது.
இந்த தோஷத்தை நீக்க பரிகாரம் செய்வது அவசியம். அதனால் தன் தந்தையிடம் சென்று இந்த தோஷம் நீங்க என்ன செய்வது என்று கேட்டார்.
அப்போது சிவபெருமான் பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றபடும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கும் என்னை பூஜை செய்து வணங்கு. அங்கு நவலிங்க பூஜை செய்து வழிபட்டு தவம் இரு. அப்படி செய்தால் உன்னை பிடித்த வீரஹத்தி தோஷம் நீங்கும் என்று அருளினார். உடனே அப்படியே செய்வதாக கூறி அதை நிவர்த்தி செய்து கொள்ள கீழ்வேளூர் என்னும் இடத்துக்கு வந்தார்.
நாகப்பட்டினம் அருகில் உள்ள இந்த இடத்தில் அழகான ஆறு ஒன்று ஓடுகிறது. முருகன் இந்த தலத்துக்கு வந்து தன் வேலை ஊன்றினார் அப்போது அங்கிருந்து புனித நீர் வெளி வந்தது. இந்த புனிதநீர் தான் தீர்த்தமானது பிறகு இந்த கீழ்வேளூரின் எட்டுத்திசைகளிலும் உள்ள கோவில் கடம்பனூர், ஆழியுர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம் பட்டமங்கலம், சொட்டால் வண்ணம், ஓதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இந்த தீர்த்தத்தில் நீராடிய பிறகு தியானத்தில் அமர்ந்தார். அப்போது சூரசம்ஹார காட்சிகள் அவரது தியானத்தை குறுக்கீடு செய்தது. சூரர்களை வதம் செய்த பிறகும் அவரால் சினத்தை ஆற்றமுடியவில்லை. பிறகு அன்னை உலகமாதாவை வணங்கினார். உலக நன்மைக்காக சூரர்களை அழித்த பிறகும் எனக்கு மன நிம்மதி இல்லாமல் உள்ளடே என்று வேண்டினார். பிறகு அன்னை மனம் குளிர்ந்து இத்தலத்தின் எல்லா திசைகளிலும் உருவத்தை பரப்பி வேலி போல் போட்டு அடைகாத்தாள். அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி முருகனை காத்ததால் இந்த பெயர் அவளுக்கு வந்தது.
அன்னையின் அடைகாத்தல் செயலால், முருகப்பெருமானைப் பிடித்த வீரஹத்தி தோஷங்கள் நீங்கியது. முருகப்பெருமான் தோஷம் நீக்கிய இத்தலமே கீழ்வேளூர் என்று அழைக்கப்படுகிறது.