மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் அதன் நகல்களை பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் தங்களின் கல்லூரி, பல்கலை. சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.mycertificates.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரி சான்றிதழ்களின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் இணையதளம் மூலம் சான்றிதழ்களின் விவரங்களை பதிவு செய்தபின், அவர்களின் மின்னஞ்சலுக்கு ஒப்புகை அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை மேற்கண்ட இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.