தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான காதல் ஜோடிகள் வந்து காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் ஒரு சிலர் வீட்டிற்கு தெரியாமல் காதல் வலையில் விழுந்து விபரீதமான முடிவுக்கு செல்லும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு மொக்கராசு தலைமையில் நிர்வாகிகள் தேங்காய் பழத்துடன், மாலைகளை சுமந்தவாறு காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க உலா வந்தனர்.
இவர்களை கண்ட காதல் ஜோடியினர் ஓட்டம் பிடித்தனர். மேலும் பள்ளி சீருடையில் வந்த மாணவ, மாணவிகளை வைகை அணை போலீசார் நுழைவாயிலில் தடுத்து திருப்பி அனுப்பினார். இதனால் வைகை அணையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம் செல்வம் ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர தலைவர் கருப்பையா, நகர செயலாளர் ராஜ்குமார், ஆட்டோ முன்னணி ராஜா ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.