இ.பி.எஸ்ஸும் , நானும் தனித்தனியாக மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கொடுக்கிறோம். இதனால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிது வந்த கனமழை தற்போது சற்றே குறையத் தொடங்கியது. இந்தநிலையில் பலவேறு கட்சியினரும் மழையினால் பாதித்த இடங்களை மேற்பார்வையிட்டு வருகின்றனர். அந்தவகையில்,
அதிமுகவின் சார்பில் பன்னீர்செல்வம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். எம்.எம்.டி.ஏ, எழும்பூர், துறைமுகம், ஆர்.கே.நகர் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் காசிமேடு துறைமுகத்தில் மீனவர்களை சந்தித்து மழையால் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழை வெள்ளத்தால் காசிமேட்டில் 20 படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சென்னையில் இன்னும் சில இடத்தில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “இ.பி.எஸ்ஸும் , நானும் தனித்தனியாக மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கொடுக்கிறோம். இதனால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. மக்களை சந்திப்பது தான் முக்கியம். இதில் பாரபட்சம் என்பது பார்ப்பவர்கள் கண்ணில் தான் இருக்கிறது” எனக் கூறினார்.