• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் கிராம மக்கள்

Byவிஷா

Mar 29, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 5 கிமீ நடந்து சென்று தான் வாக்களிக்க வேண்டிய சூழல். முதியோர், கர்ப்பிணிகள், இணைநோய் இருப்பவர்கள் இத்தனை தூரம் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது என கலெக்டரிடம் பல ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். இது குறித்து கிராமமே திரண்டு சென்று பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கள் கிராமத்திற்கு இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் தங்கள் ஒட்டுமொத்த கிராமமும் வாக்களிக்கப்போவதில்லை என கூறி வருகின்றனர். அத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி சுமார் 4 நாட்ககளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராமம் முழுவதும் “தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல,” உட்பட பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இச்சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என கிராம மக்கள் கூறி வருகின்றனர்.