• Mon. Apr 29th, 2024

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த விஜய்வசந்த், தாரகை கத்பட்.

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் விஜய்வசந்த் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலவிளை பகுதியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோர் இன்று தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஈத்தவிளை, மடிச்சல், படந்தாலு மூடு, களியக்காவிளை, பறக்காடு, மேல்பாலை, தேவி கோடு, பணச்சமூடு, முக்கூட்டுக்கல், மஞ்சாலுமூடு, அருமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து வெளியில் வந்து புன்னகையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும், மலர்த்துவியும், ஆரத்தி எடுத்தும் வேட்பாளர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இன்றைய பிரச்சாரத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால்சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தனது பிரச்சார பயணத்தின் போது வாக்கு சேகரித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் விஜய்வசந்த்..,

பாஜக தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறி வருகின்றார்கள். மீண்டும் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுவாக மட்டுமே இருக்கும் தேர்தல் என்ற ஒரு நடைமுறையையே அவர்கள் எடுத்து விடுவார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்பவர்கள் இனி ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு என்று சொல்லி நாடு முழுவதும் அனைத்திலும் ஒன்று மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்து விடுவார்கள்.

பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள் என இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இந்தியர் என்ற உணர்வோடு வாழக்கூடிய ஜனநாயக நாடு நம் நாடு. ஆகவே நமது ஜனநாயகம் நிலைத்திருக்க நீங்கள் அனைவரும் தவறாமல் இந்தியா கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும்.

வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ போன்ற துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் மக்கள் இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். நிச்சயம் இந்த தேர்தலில் மக்கள் விரோத பாஜக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.

பொய்யான வாக்குறுதிகளையும், பிரிவினைவாத கொள்கைகளையும் கொண்டு ஆட்சிக்கு வந்த பாஜகவினர் மக்களை ஏமாற்றும் வகையில் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்துவேன் என்று சொன்னார்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்துவேன் என்றார்கள். ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று சொன்னார்கள். ஆனால் இவை அனைத்தும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன பொய் வாக்குறுதிகளாகவே இருந்தது கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மக்களை ஏமாற்றும் வஞ்சிக்கக்கூடிய ஆட்சியை மட்டுமே நடத்தி வருகிறது.

பெண்கள் விவசாயிகள் இளைஞர்கள் தொழிலாளர்கள் வாழ்வு முன்னேற வேண்டும் என்றால், அதற்கு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் எனக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் தாரகை கத்பட் அவர்களுக்கும் கை சின்னத்தில் உங்களது விலைமதிப்பு மிக்க வாக்குகளை அளிக்க வேண்டும் என உங்களில் ஒருவனாய் இருந்து அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கின்றேன் என கூடி நின்ற பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *