புத்தாண்டு தினத்தில் தன்னை சந்திக்க வந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தும்,பறக்கும் முத்தத்தை கொடுத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உற்சாகமூட்டினார்.
புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு பளீரென வெள்ளை நிற உடையில் விஜயகாந்த் நேற்று காலை வந்தார். அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோரும் வந்தனர். அப்போது திரண்டிருந்த நிர்வாகிகள்-தொண்டர்களும் விஜயகாந்தை பார்த்து ‘கேப்டன் வாழ்க… கேப்டன் வாழ்க…’ என்று உற்சாக குரல் எழுப்பினர். விஜயகாந்தும் அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் கட்சி அலுவலக வாசற்படிக்கு விஜயகாந்த் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரை சற்று தள்ளி நின்றபடி நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொண்டர்களை பார்த்த விஜயகாந்த் தனது கையை அசைத்தும், தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி உற்சாகமூட்டினார். பின்னர் தன்னை சந்திக்க வந்த அனைவருக்குமே இருகரம் கூப்பி அவர் நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பறக்கும் முத்தத்தை கொடுத்தார். ‘ இந்த நிலையிலும் தொண்டர்களை கம்பீரமாக சந்திக்கிறாரே…’ என்று தொண்டர்க நெகிழ்ச்சி அடைந்து போனார்கள். புத்தாண்டு பரிசாக நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு தலா 100 ரூபாய் நோட்டை பிரேமலதா வழங்கினார். ஏறக்குறைய 40 நிமிடங்களுக்கு பிறகு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டனர். புத்தாண்டையொட்டி தொண்டர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.